சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக…..(காணொளி)

435 0

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்தில், இன்று  காலை பேரணியாக மட்டக்களப்பு நகரில் பிரதான வீதி ஊடாக மாவட்ட செயலகம் வரை பேரணியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலகத்திற்கு சென்ற பட்டதாரிகள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டபோது அவ்விடத்திற்கு அரசாங்க அதிபர் வருகை தராத காரணத்தால், பட்டதாரிகள் தாங்களுக்கு கிடைத்த பட்டத்தின் நகல்களை தீயிட்டு எரித்தனர்.

இதனை தடுப்பதற்கு முயற்சித்த பொலிசாருக்கும் பட்டதாரிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன்போது இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றிணைந்த பட்டதாரிகளின் சங்க ஏற்பாட்டாளர் தென்னே ஞானானந்த தேரருக்கு சிறுகாயம் ஏற்பட்டதால், பொலிசாருக்கும் தேரருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

முறுகல் நிலை சுமுக நிலைக்கு வந்ததன் பின்னர் பட்டதாரிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இதேவேளை மாவட்ட செயலகத்துக்கு முன்னாள் ஒன்று கூடிய பட்டதாரிகள், மீண்டும் தாங்கள் அரசாங்க அதிபரை சந்திக்க வருவதாவும் தங்களது இந்த ஆர்பாட்டம் தொடரும் எனவும் கூறி மீண்டும் தாங்கள் ஆர்பாட்டம் மேற்கொண்டுள்ள காந்தி பூங்கா வளாகத்தை சென்றடைந்தனர்.