மட்டக்களப்பு பெண்களின் எழுச்சிக்கான பிரச்சாரப் பாதயாத்திரைக்கு தயார்-சந்திரசேகரம் அருணாளினி

256 0

பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான பிரச்சாரப் பாத யாத்திரை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாத யாத்திரையானது மார்ச் மாதம் முதலாம் திகதி காலை 9 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமாகி மட்டக்களப்பு டேபா மண்டபம் வரையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மகளிர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திரசேகரம் அருணாளினி இதனை தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டங்களினூடாக பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பிரதிபலிப்பதாக இந்த பாதை யாத்திரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வுகள் பல வழிகளிலும் வழங்கப்பட்டிருந்தாலும், பெண்கள் சமூகத்தில் அடைய வேண்டிய இலக்கு அதிகம் காணப்படுகின்றது.

பெண்களின் முன்னேற்றம் என்பது ஒன்றிணைந்த ஒரு விடயமாகப் பார்க்கப்பட வேண்டும். கடன் பிரச்சினை, வீட்டு வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் வன்முறைகள் என்பன இன்னமும் இலங்கையில் குறையவில்லை.

பல மட்டங்களில் விழிப்புணர்வுகள் இருந்தாலும் சுய ஆளுமை விருத்தி போதாமலிருப்பதும் சமூக விழுமியங்கள் இன்னமும் பெண்களை பின்னிலைப் படுத்தி வைத்திருப்பதும் பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு தடையாக இருக்கின்றது.

இதற்கு ஒட்டு மொத்த சமூகத்தின் கூட்டிணைந்த ஒரு பொறிமுறை விழிப்புணர்வே வெற்றியளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இயங்கி வரும் பிரதேச பெண்கள் செயலணியும், மாவட்ட மகளிர் பிரிவு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.