கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு- உயிரிழந்த தமிழக மீனவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்

73 0

தமிழக மீனவர் மீது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 14.2.2023 அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள் என்றும், அவர்கள் மீது கர்நாடக மாநில வளத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜா என்ற காரவடையான் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த ராஜா என்ற காரவடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.