“விடுதலைக்காய் எழுச்சி கொள்வோம் – பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில், உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற நூறு கோடி மக்களின் எழுச்சி எனும் நிகழ்வுக்கு இணையாக, அக்கரைப்பற்று சின்னமுகத்துவார கடற்கரை பிரதேசத்தில் நேற்று (16) பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அரங்கத்தின் தலைவி உள்ளிட்ட இணைப்பாளர்கள் மற்றும் இளைஞர் – யுவதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் அலுவலகத்தில் இருந்து இளைஞர் – யுவதிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து, பெண்கள் அடக்கு முறைக்கு எதிராக வாசகங்களை தாங்கிய சுலோக அட்டை மற்றும் பதாதைகளை தாங்கி சைக்கிள் சவாரி மூலமாக சின்னமுகத்துவாரத்தை சென்றடைந்தனர்.
அங்கு மனித இனத்தில் கிட்டத்தட்ட சரிபாதியாக அடையாளம் காணப்படும் பெண்கள் மீதான வன்முறைகளை இல்லாதொழிக்க வேண்டுவதாகவும் இது தொடர்பிலான விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் உரையையும் நிகழ்த்தினர்.
வன்முறைகளிலிருந்து விடுதலை பெற்ற சமூகங்களுக்காக எழுச்சி கொள்வோம், முதலாளித்துவத்தின் நுகர்வுப் பண்பாட்டிலிருந்து விடுதலை பெறுவோம் என எழுச்சி கொள்வோம், பூமிக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர எழுச்சி கொள்வோம் போன்ற கருத்துகளை பாடல்கள், பேச்சுக்கள் மூலமாக வெளியிட்டனர்.

