உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான கருத்தரங்கு

151 0

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு, திருகோணமலை ஜூபிலி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன், சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா கிளையினால், இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா 03 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச சர்வமதக் குழுமத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய சமாதானம், இன ஐக்கியம், சகவாழ்வு மற்றும் பன்மைத்துவம் போன்றவற்றைக் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு செயற்றிட்டங்களையும், பயிற்சிகளையும் தேசிய சமாதான பேரவை பிரதேச மட்டங்களில் மேற்கொண்டு வருகிறது.

அவ்வாறான செயற்றிட்டங்களில் ஒன்றான மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு (ARC) எனும் துணைப்பொருளில், சர்வ மத குழுவின் நோக்கு, அதன் இலக்கு, சமூக அங்கிகாரம், உள்ளக ஒற்றுமை, குழுச் செயற்பாடு மற்றும் பெறுபேறு தொடர்பில் இங்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.

கருத்தரங்கின் வளவாளராக தேசிய சமாதானப் பேரவையின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.யூ. மதனி உவைஸ் கலந்துகொண்டார்.

மேலும், சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசனின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிக் அலாப்தீன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சமூகமட்ட செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.