தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆவினில் 322 காலி பணியிடம் நிரப்பப்படும்

112 0

ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பால்வளத் துறை ஆணையர் ந.சுப்பையன் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில், மாநிலத்தில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் நடைபெற்ற நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான ஆணையை பால்வளத் துறை ஆணையர் ந.சுப்பையன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியங்களில் மேலாளர் வரையிலான 322 காலியிடங்களின் எண்ணிக்கை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கான கல்வித் தகுதிகள் உள்ளிட்ட இதர பொது நிபந்தனைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலாளர், துணைமேலாளர், செயல் அலுவலர், ஜூனியர் செயல் அலுவலர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.