ரஷ்யாவிடமிருந்து மூன்றாம் கட்டமாக எஸ்-400 ஏவுகணை இந்தியாவுக்கு விரைவில் விநியோகம்

71 0

எஸ்-400 ஏவுகணையின் 3-வதுதொகுப்பு, இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர்டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி இந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா விநியோகம் செய்தது.

இந்த ஏவுகணையின் முதல்தொகுப்பு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்தது. அந்த எஸ்-400 ஏவுகணை தற்போது சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா அனுப்பிய 2-ம் கட்ட ஏவுகணைகள் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்தியா-ரஷ்ய உறவுகள் குறித்த கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் எஸ்-400 ஏவுகணையின் 3-வது தொகுப்பு எப்போது இந்தியாவுக்கு வழங்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியதாவது:

எஸ்-400 ஏவுகணையின் 3வதுதொகுப்பு இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க இருதரப்பும் உறுதியுடன் உள்ளன. அதை நாங்கள் நிச்சயம் செய்வோம். இதை யாரும் தடுக்க முடியாது. இந்தியா-ரஷ்யா இடையேயான ராணுவ உறவு இதற்கு முன் இல்லாத வகையில் உள்ளது.

இந்தியாவில் டி-90 டேங்க், சுகாய் போர் விமானங்கள் மற்றும் ஏகே-203 ரைபிள்கள் தயாரிப்பு திட்டம் போன்றவை இந்தியாவில் தயாரிக்கும் விதிமுறைகளுடன் முழுவதும் ஒத்துப்போகின்றன.

இந்தியாவும் – ரஷ்யாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணை முன் மாதிரியாக திகழ்கிறது. எஸ்-400 ஏவுகணை உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியுடன் உள்ளன. ரஷ்யா – உக்ரைன் இடையிலான சண்டையை நிறுத்துவதற்கு யார்முன்வந்தாலும், அதை திறந்த மனதுடன் வரவேற்கிறோம். இதில் இந்தியா தீவிரம் காட்ட விரும்பினால், அது குறித்து நிச்சயம் பரிசீலிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.