மட்டக்களப்பில் எழுச்சி பேரணியில் நாமும் கலந்துக்கொள்வோம் வாரீர்!

125 0

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நாளை நிறைவு பெறும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் பேரணியில் தமிழர் என்ற உணர்வுடன் எல்லோரும் கலந்துக்கொள்வோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 75ஆவது சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் என்பதால் வடக்குகிழக்கை ஒன்றினைத்து இந்த பேரணி கடந்த (04.02.2023) சுதந்திர தினத்தன்று யாழில் ஆரம்பித்தது.

இந்த பேரணி நாளை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நிறைவுறும் நிகழ்வில் தமிழர் என்ற உணர்வுடன் எல்லோரும் கலந்து கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் பேரணியானது நாளை(07.02.2023) காலை 9 மணி அளவில் வெருகலையை வந்தடைந்து அதன் பின்னர் கதிரவெளியில் மு.ப.10 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து செல்வோர் இணைந்து கொள்வார்கள்.

அதன் பின்னர் 11 மணிக்கு மட்டக்களப்பை நோக்கி பேரணி சென்று பிற்பகல் 03 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவை வந்தடையும்.

அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தரும் மற்றுமொரு பேரணி மு.ப.11 மணியளவில் பெரியகல்லாற்றை தாண்டி பி.ப. 1.30 மணிக்கு களுதாவளையில் பிள்ளையார் கோயில் சந்தியில் மேலும் பலர் இணைந்து கொண்டு அங்கிருந்து பி.ப 03 மணிக்கு மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தை வந்தடைந்து அங்கு பேரணி தொடர்பான பிரகடணம் வாசிக்கப்பட்ட பின்னர் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நிறைவு பெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப்பேரணியில் தமிழ்தேசிய உணர்வாளர்கள், தமிழ்தேசிய அரசியல் கட்சி சார்ந்தவர்கள், இலங்கை தமிழரசுகட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மகளீர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.