மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது முறையற்றது

73 0

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியுமாயின் ஜனாதிபதி,பிரதமர் பதவி எதற்கு,? நாட்டின் நிர்வாகத்திற்கு மக்கள் நேரடியாக தமது பிரநிதிகளை தெரிவு செய்ய வேண்டும்.

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச அதிகாரிகளினால் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது முறையற்றதாகும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை ஜனநாயக நாடு சர்வதேச மட்டத்தில் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினால் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச சமவாய சட்டங்களினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாக கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் முதனிலையில் காணப்படுகின்றன. உள்ளூராட்சிமன்றங்கள் முறையாக இயக்கப்படும் பட்சத்தில் நாட்டின் சூழல் கட்டமைப்பு சிறந்ததாக அமையும்.

ஆகவே உள்ளூர் அதிகார சபைகள் நாட்டுக்கு அத்தியாவசியமானது. உள்ளூராட்சிமன்ற சபை உறுப்பினர்கள் முறையாக செயற்படாவிட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தலை பிற்போடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கும் உண்டு.வேட்பு மனுத்தாக்கலை தொடர்ந்து மூன்று வாரத்திற்கு தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.

2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொவிட் பெருந்தொற்று தாக்கத்தை கருத்திற் கொண்டு பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டது.

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் தேர்தல் வாக்கெடுப்பை பிற்போடுவது முறையற்றது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆகவே தேர்தலை பிற்போடுவது முறையற்றது என்ற நிலைப்பாட்டில் உள்ளேன் என்றார்.