‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’ – பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம்

59 0

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள்,தங்களது ஆதார் எண்ணைஇணைப்பதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தமிழக அரசின் திட்டங்களிலும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, உதவித்தொகை, ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைவோரும் விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் கூறியிருப்ப தாவது: அரசின் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதி: தமிழக சமூக நலத் துறை சார்பில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்புநிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. அந்த வைப்பு நிதிக்கான ஆவணம், குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு விதிகள்படி, திட்டப் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயனடைவோர், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், பெற்றோர் மூலம் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து, அதைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடியகிசான் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தாசில்தார் உள்ளிட்ட சான்றொப்ப அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து, விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அரசிதழில் தெரிவிக் கப்பட்டுள்ளது.