யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்!

192 0

யாழ். பல்கலைக்கழக பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களின் பதவிக்காலம் கடந்த 15ஆம் திகதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 16ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர், தற்போது மேலும் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், ஓய்வுபெற்ற பணிப்பாளர் நாயகம் வி.கனகசபாபதி, லங்கா சஸ்ரெயினபிள் வென்ஜஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குலேந்திரன் சிவராம், வடக்கு உணவு நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான கபிலன் கருணானந்தன், யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்ந்த வண. கலாநிதி பி.ஜே. ஜெபரட்ணம் ஆகியோரே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான கடிதங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.