தீர்மானங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யவேண்டும்

171 0

தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தீர்மானங்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் ஏழுப்பப்பட்டு வருகின்றன. அதனால்  உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்யவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கடுவலை மாநகர சபை உறுப்பினர் பினர ஜயவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் நாட்டுக்குள் பாரிய கருத்தாடல்களுக்கு உட்பட்டு வருகின்றன. குறிப்பாக நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வரும் நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மத்தியிலேயே கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்திருக்கின்றது.

தேர்தலை மார்ச் 9ஆம் திகதி என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள போதும் அதுதொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆணைக்குழு உறுப்பினர்கள் 5 பேரில் 2 பேரின் அனுமதி மாத்திரமே அதற்கு கிடைக்கப்பெற்றிருப்பதாக தற்போது தகவல் வெளிவந்திருக்கின்றது.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தொடர்பாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மத்தியில் பொது இணக்கப்பாடு இல்லை. அதற்குள் பிரச்சினை இருந்து வருவதாலே தற்போது அதன் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளார். பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் சட்டத்துக்கு முரணாகும். அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு சட்ட ரீதியானது அல்ல.

அதனால்  உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்புகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும். இம்முறை தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்களில் 100க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.