பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து…(காணொளி)

251 0

வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில், வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை நேற்றைய தினம் பார்வையிட்டதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் தெற்கின் மாத்தறை, மொனராகலை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர், யுவதிகள் 20 பேர் வவுனியா பூந்தோட்டம் முகாமில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தங்கியுள்ள 110 குடும்பங்களையும் பார்வையிட்டதுடன் அவர்களது பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.

இதன்போது குறித்த மக்களின் அடிப்படை வசதிகளின் நிலை, மாணவர்களின் கல்வி நிலை, வாழக் கூடிய சூழல் தொடர்பில் ஆராய்ந்த இளைஞர், யுவதிகள் அம் மக்களின் நிலைமையைப் பார்த்து தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களின் பின்னும் வடக்கில் பல குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி மிக கஸ்டங்களுக்குள் வாழ்வது தொடர்பில் தென்பகுதியில் வாழும் பலருக்கும் தெரியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள மக்களின் நிலமை மற்றும் வடக்கின் உண்மை நிலை தொடர்பில் தெற்கில் தெரியப்படுத்தி மக்கள் மத்தியில் உள்ள சில தவறான எண்ணங்களை நீக்க தாம் முயற்சிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இங்குள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர முடிந்த உதவிகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாகவும் தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் தெரிவித்துள்ளனர்.