மருந்து தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

150 0

 நாடாளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நோயளர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதற்கு கூட கைவசம் மருந்துகள் இல்லை.

எனவே அரசாங்கம் மருந்து தட்டுப்பாட்டிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகப் பேச்சாளரும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக  நாட்டில் பல வைத்தியசாலைகளில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.  வெளிநோயாளர்கள் மற்றும் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயர்களுக்கு வழங்குவது கூட மருந்துகள் இல்லை.

நோயாளர் ஒருவருக்கு 5 வகையான மருந்துகளை எழுதினால் அவற்றுள்  3 மருந்துகளை  பணம் கொடுத்து வெளியில் வாங்க வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது. மேலும் மருந்து பொருட்களின் விலை உயர்வு மக்களால் தாங்கி கொள்ள முடியாத நிலையில் காணப்படுகிறது.

இருப்பினும் சுகாதார அமைச்சு நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அங்கு இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்கு முயற்சிக்கிறது.  இந்நிலையில் அரசாங்கம் மருந்து தட்டுப்பாட்டிற்கு

உடனடியாக நிலையான தீர்வு பெற்று தர வேண்டும். இல்லையேல் உலக சுகாதார ஸ்தாபனம். சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம்.

மேலும் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள வருமான வரி சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வரியின் பாதிப்பு தொடர்பில் எழுத்து  மூலமாக அறிவித்தோம். இருப்பினும் அது தொடர்பில் இந்த தீர்வுகளும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே நாம் வருமான வரி மூலத்திற்கு எதிராக போராட வேண்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி வரை கறுப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.

வரி சட்டமூலத்திற்கு எதிராக நாங்கள் செயற்படவில்லை. இருப்பினும் நியாயமான வரியை அறவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.எமதுகோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள்.

அவ்வாறில்லையெனில்  மின் பொறியாளர் சங்கம், பல் மருத்துவசங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், விசேட வைத்தியர்கள் சங்கம் போன்ற சங்கங்களுடன் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் பாரியதொரு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார்.