ஈழத்தின் முன்னணிப் பாடகர் இன்று பிற்பகல் எஸ்.ஜே.சாந்தன் காலமானார். 2ம் இணைப்பு (காணொளி)

267 0

 

ஈழத்தின் முன்னணிப் பாடகர் இன்று பிற்பகல் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்.

57 வயதுடைய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் இன்று பிற்பகல் 02 மணியளவில் காலமானார்.

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த எஸ்.ஜே.சாந்தன், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடகராக விளங்கினார்.

1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.

முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

இதன் பின்னர் ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.

அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.

1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.

அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் இன்று மாலை 4 மணியிலிருந்து, யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு அருகாமையிலுள்ள மண்டபத்தில் இரவு 10 மணிவரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

பின்னர் சாந்தன் வசித்து வந்த மாங்குளம் புதிய கொலணியிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை மாலை கிளிநொச்சி 155ஆம் கட்டையில் அமைந்துள் வீட்டில் இறுதி நிகழ்வு நடைபெறும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.