ஜனாதிபதி ரணிலின் திட்டத்துக்கு இ.தொ.கா. ஆதரவு – அமைச்சர் ஜீவன் அறிவிப்பு

125 0

னாதிபதி ரணில் விக்ரமசிங்க மொட்டு கட்சியின் கைக்கூலி என சிலர் விமர்சிக்கின்றனர். இது அரசியல் செய்யும் தருணம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள் நலன் கருதி அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகிய நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம் என்று காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மொட்டு கட்சியினரின் கைக்கூலி அல்ல. தனது செயல் மூலமே அவர் அதனை நிரூபித்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜீவன் கூறினார்.

நுவரெலியாவில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், எம்.பி.யுமான எம்.ராமேஷ்வரன் ஆகியோரும் உடனிருந்தனர். இங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளூராட்சி மன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சி மாறப்போவதில்லை. எனினும், மக்களுக்கு தமது உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை தெரிவுசெய்யக்கூடியதாக இருக்கும்.

நாட்டில் தற்போது சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில்தான் அவர்களுக்கு சம்பளமும் சிறப்புரிமைகளும் வழங்கப்படுகின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இதனை எவ்வாறு நிர்வகிப்பது?

அதேபோன்று உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தால் அது சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தில் தாக்கம் செலுத்தும்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் ஊடாக நிலையான ஆட்சியை ஏற்படுத்தலாம்.

அவ்வாறானதொரு தேசிய மட்ட தேர்தலே ஏற்புடையதாக இருக்கும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குட்டித் தேர்தல் மேலும் சுமையாகவே அமையும்.

எது எப்படி இருந்தாலும் ஜனநாயக வழியில் நாம் தேர்தலை எதிர்கொள்வோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மொட்டு கட்சியின் கைக்கூலி என சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர் ஜனாதிபதியான கையோடு மொட்டு கட்சியின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை இரத்து செய்தார்.

அவர் மொட்டு கட்சியின் கைக்கூலி என்றால் அப்படி செய்ய முடியுமா? பாராளுமன்ற தேர்தல் ஊடாக அரசமைப்பின் பிரகாரம், தெரிவான ஜனாதிபதி அவர் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.

மலையக அரசியலில் இன்று சகோதரத்துவ உணர்வு உள்ளது. அந்த புரிந்துணர்வு இனி மாறாது. நாங்கள் இன்று அமைச்சராக இருக்கலாம். நாளை அவர்கள் அமைச்சராகலாம். அதேபோன்றுதான் பிரதான கட்சிகளுடனும் எமக்கு புரிந்துணர்வு உள்ளது.

மக்கள் பக்கம் நின்று, மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களையே நாம் எடுப்போம் என்றார்.