புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் ரத்மல்யா பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் வயோதிப பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் ரத்மல்யா பகுதியில் பஸ்ஸை நிறுத்துமாறு கூறி, பஸ்ஸில் ஏறுவதற்கு பெண் வீதியைக் கடக்க முற்பட்டபோதே குறித்த பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி ஏத்தாலை ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய சாஹிபு பகீர் மயிமுந்நாச்சியா என்ற வயோதிப பெண்ணொருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

