நாட்டில் அடுத்து ஆட்சியமைக்கக் கூடிய ஒரேயொரு பலம் மிக்க கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அமைச்சரவை எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்த முடியாது. அவ்வாறிருக்கையில் கட்டுப்பணம் பெறுவதை நிறுத்துவதற்கு அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நடைமுறைப்படுத்த முற்பட்டமை சட்டத்திற்கு முரணான செயலாகும்.
இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு ஜனநாயகத்தை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 7900 பில்லியன் ரூபா செலவில் செலவில் ஏன் தேர்தலுக்கான 10 பில்லியன் ரூபாவை வழங்க முடியாது.
மக்களின் வரிப்பணத்தில் செலவுகளை செய்யும் அரசாங்கம் , அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்க வேண்டும். தற்போது பலமான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி , அடுத்த முறை நிச்சயம் ஆட்சியமைக்கும். எனவே எம்முடன் இணைய விரும்பும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.