உரிய தினத்தில் தேர்தல் நடத்தப்படும்!

183 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவரும் எதிர்பாராத வகையில் அமோக வெற்றி பெறுவோம்.

உரிய தினத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

குருநாகல் நிர்வாக மாவட்டத்தின் உள்ளூர் அதிகார சபைகளுக்கான கட்டுப்பணத்தை திங்கட்கிழமை (9) குருநாகல் மாவட்ட பிரதேச செயலகத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குருநாகல் மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். தேர்தலை கண்டு அச்சமடைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில், நாங்கள் நாட்டுக்கு எதிராக செயற்படவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்ட வகையில் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

நாட்டு மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள். நாட்டு மக்கள் எம்முடன் உள்ளார்கள். எமக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவரும் எதிர்பாராத வகையில் அமோக வெற்றி பெறுவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததை தொடர்ந்து உறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும். கட்சியின் அனைத்து தரப்பினரது ஆலோசனைகளுக்கமைய கூட்டணி தொடர்பில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும்.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பிட்ட தினத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றார்.