நாம் பல மேடை பேச்சுக்களை நடத்துவோம். ஆலோசனைகள் வழங்குவோம். ஆனால், நாம் எமது பேச்சுக்கேற்ப செயற்படுகின்றோமா என்பதை நாமே எமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
நாம் எதைச் செய்தாலும், முரண்பாடுகள் உருவாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால், முரண்பாடுகளை சமாளிக்கக்கூடிய ஆளுமை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.
மறைந்த அதிபர் சைவப்புலவர் செல்லத்துரை அவர்களின் ஆளுமை பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணம், அவரின் வாழ்வும் வாக்குமாகும்.
இதனால்தான் அவர் இன்றும் மதிக்கப்படுகிறார் என யாழ். இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய பழைய மாணவரும் நிதி அமைச்சின் பொது நிதித் திணைக்களத்தின் பொதுத் திறைச்சேரி மேலதிக பணிப்பாளர் நாயகம் உ. சந்திரகுமாரன் தெரிவித்தார்.
இளவாலை யாழ். மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 17, 18) ஆகிய தினங்களில் ஏழுர் அரங்கில் இடம்பெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வில் உ. சந்திரகுமாரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவானது இரு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (டிச. 18) பழைய மாணவர்களின் கதம்ப நிகழ்வு இரண்டாம் நாளில் இடம்பெறுகிறது.
இந்த பாடசாலையின் பழைய மாணவர் என்ற நிலையிலும் இந்த பாடசாலையின் நலன்விரும்பி என்ற நிலையிலும் நான் இங்கு சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
இந்த பாடசாலையின் ஆரம்பம், அதிபர்களின் ஆளுமை, இடம்பெயர்வுகள், மிடுக்கான முன்னேற்றங்களை நாம் அறிவோம்.
இங்கு படித்த மாணவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாடுகள், இவர்களின் பாடவிதானத்துக்கு மேற்பட்ட செயல்பாடுகள், ஆளுமைகள் தொடர்ந்து மிளிர வேண்டும் என்ற நோக்கில் இந்த நூற்றாண்டு விழாவை முன்னெடுத்துள்ளோம்.
இப்பாடசாலையில் கற்ற நாங்கள் இன்று மகுடம் சூடியவர்களாக இருக்கின்றோம் என்றால் ‘வாழக்கல்வி’ என்றதை நாங்கள் எங்களுக்குள்ளேயே உட்புகுத்தியமையே காரணம்.
கடந்த மற்றும் இந்நாள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலையின் பெயர் மங்காவண்ணம் கட்டிக்காத்து வருவதை நாம் மதிக்க வேண்டும்.
நீண்டகால போராட்டத்துக்கும் இன்று நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கும் நமக்கு ஒரு முக்கிய ஆளுமை தேவைப்படுகிறது.
இந்த பாடசாலையில் நாங்கள் கற்றபொழுது பாடசாலை சமூகம் நல்லதொரு ஆளுமை கொண்டவர்களாக எங்களை உருவாக்கியது.
கிராமிய பாடசாலைகளில் கற்பவர்கள் நல்லதொரு சூழலிலும் ஆளுமை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
மேல் மாகாணத்தில் இருப்பவர்களை விட வட மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் விசேடமாக காலி, மாத்தளை, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நல்லதொரு தலைமைத்துவம் கொண்டவர்கள் காணப்படுகின்றனர்.
கிராமிய சூழலும் பண்புகளுமே இவர்களை ஆளுமையுள்ளவர்களாக உருவாக்கியுள்ளது.
ஆகவே, இன்று இந்த பாடசாலையை நம்பியே நாம் எமது பிள்ளைகளை அனுப்பியுள்ளோம். இதை பொறுப்புடன் அதிபர், ஆசிரியர்கள் கையாள்வார்கள்.
இந்த பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைகளுக்கு மாணவர்கள் இடம்பெயர்ந்து செல்லாதிருக்க, இப்பாடசாலை தொடர்ந்து ‘சிறந்த பாடசாலை’ என பெயர் பொறிக்கப்பட வேண்டும்.
அயல் பாடசாலைகள் மிகவும் பிரபல்யமானவை. ஆகவே, நாம் பல போட்டிகளின் மத்தியிலேயே கல்விச் செயற்பாடுகளை நகர்த்த வேண்டியுள்ளது.
நல்லதொரு சமூகத்தை இப்பாடசாலையின் மூலம் கொண்டுசெல்ல இந்த நூற்றாண்டு களம் அமைத்துள்ளது.
நாம் பல மேடை பேச்சுக்களை நடாத்துவோம். ஆலோசனைகள் வழங்குவோம். ஆனால், நாம் எமது பேச்சுக்கு ஏற்றவாறு செயல்படுகின்றோமா என்பதை நாமே எமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
நேரத்துடன் பாடசாலைக்கு வா என மாணவனை பார்த்து ஆசிரியர் கூறுகிறபோது, அந்த ஆசிரியர் உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு வருகின்றாரா என்பதை மாணவன் கவனிக்கின்றான் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
சைவப்புலவர் செல்லத்துரை அவர்களின் ஆளுமை பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணம் என்ன? அவரின் வாழ்வும் வாக்குமாகும். இதனால்தான் அவர் இன்றும் மதிக்கப்படுகின்றார்.
இவரின் இந்த பண்பு பாடசாலையிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் பாடசாலையில் அனைத்து மாணவர்களையும் மேடையேற்றி அவர்களின் மேடைக்கூச்சத்தை அகற்ற வேண்டும். பல மேடை நிகழ்வுகளை பாடசாலை முன்னெடுக்க வேண்டும். அப்போதே ஆளுமை மாணவர்கள் உருவாகப்படுவார்கள்.
அரச நிதியற்ற தன்மை கொண்ட இக்காலத்தில் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பால் இன்று ஒரு புதிய கட்டடம் அமைத்ததின் நிமித்தம் இந்த மண்டபம் இவ்விழாவில் சோபித்து நிற்கின்றது.
நான் நிதி அமைச்சில் கடமையாற்றுவதால் இந்த விடயத்தை நன்கறிய முடிகிறது.
இன்று அரசு கடனாளியாக இருக்கின்றபோதும் இவ்விழாவை பல மில்லியன் ரூபா செலவில் நீங்கள் கொண்டாடுகின்றீர்கள். எனினும், நீங்கள் கடனாளிகள் அல்ல. பழைய மாணவர்கள் ஒன்றுபட்டு செயல்பட்டமையாலேயே இது சாத்தியம்.
அரசுக்கு இயலாமை இருக்கின்றது. ஆனால், மக்களுக்கு இயலுமை இருக்கின்றது. இதுதான் எமது பலம். தமிழ் மக்கள் பல சோதனைகள் கடந்து வந்தவர்கள். இதனால் இது புதியதொன்றல்ல.
இன்று இந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் சர்வதேச மட்டத்தில் உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள் என்றால் இப்பாடசாலை தந்த வரமாகும்.
மறைந்த அதிபரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, இதன் மூலம் இக்கல்லூரியின் கல்வி நிலைக்கு நாம் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு விசேடமாக ஒழுக்கமும் ஆங்கில கல்வியும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
நாம் எதைச் செய்தாலும் முரண்பாடுகள் உருவாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால், முரண்பாடுகளை சமாளிக்கக்கூடிய ஆளுமை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.
நான் பல இடங்களில் கடமையாற்றியவன். சமய பிரிவினையை உருவாக்கி, அதில் குளிர் காய்ந்தவர்கள் பலர். ஆனால், ஒற்றுமை என்பது நான் இளவாலையிலேயே காண்கின்றேன். இது மாணவர்கள் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் தொடர்ந்து காணப்படுவதாகும். இது எனது தாயாரின் கிராமத்துக்கும் பெருமையாக இருக்கிறது என தெரிவித்தார்.

