ஏப்.1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்

110 0

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் அரிசியுடன், வரும் ஏப்.1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து விநியோகிக்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியுடன், செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் கீழ் செயல்படும் அரைவை ஆலை முகவர்களுடன், அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரைவை ஆலை முகவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:

அரைவை ஆலை முகவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். கடந்த 18 மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முழுவதுமாக அரைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசியைமக்களுக்கு வழங்குமாறு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. அதன்அடிப்படையில், வரும் 2023ஏப்.1-ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, 100 கிலோசாதாரண அரிசியுடன், ஊட்டச்சத்துகலந்த செறிவூட்டப்பட்ட 1 கிலோஅரிசியை கலப்பது குறித்து முகவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி கூறும்போது, ‘‘அனைத்து மாவட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், 755 அரைவை முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதல்வர் உத்தரவின்படி, வரும்ஏப்.1-ம் தேதி முதல் இரும்புச் சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் கலந்து விநியோகிக்கப்படும்.

பொங்கல் பரிசு தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். கடந்த காலத்தைவிட தற்போது அரிசி கடத்தல் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கூட்டத்தில், உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகம் உணவுப் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக உள்ளது. மக்களுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. எனவே 100 கிலோ அரிசியில், ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

முந்தைய காலத்தில் மக்கள் உணவுக்காகப் பயன்படுத்திய, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் அனைத்தும் சத்து நிறைந்தவையாக இருந்தன. ஆனால், தற்போது பாலிஷ் செய்யப்பட்ட அரிசியையே மக்கள் விரும்புகின்றனர். இதுதொடர்பாக மக்களிடம் புரிதல் அவசியம்.

மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து உணவு திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு 18 லட்சம் நெல் அரைவை செய்யப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு நெல் முழுவதும் அரைவை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.