அரசாங்கம் தேர்தல்களை பிற்போடுவதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முடிந்தால் உரிய காலத்துக்குள் நடத்துங்கள். ஐக்கிய மக்கள் பெரு வெற்றியீட்டிக்காட்டுவோம் அத்துடன் அரசாங்கத்தின் பரும்பான்மையை விரைவில் வீழ்த்துவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது கட்சி சம்மேளனம் கொழும்பு – கெம்பல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு வங்குரோத்தடைந்துள்ளது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. அதேபோன்று நாட்டில் தொழில் வாய்ப்புகள் குறைவடைந்துள்ளன. ஆனாலும் அரசாங்கம் அடக்குமுறைகளை நிறுத்தவில்லை. இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய பொறுப்புள்ளது.
நாட்டுக்கு இழைத்த நாசகார செயற்பாடுகளால் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை என ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் மக்கள் பலவந்தமாக வெளியேற்றியிருந்தார்கள். ஆனால், மக்களால் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களின் குரலுக்கு செவிமடுக்காது மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதியாக்கினார்கள்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வந்ததும் வௌிநாட்டில் இருந்து நிவாரணங்கள் கிடைக்கும் வரிசைகள் இல்லாது போகும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள்.
திருடர்களால் திருடப்பட்ட பணத்தை மீளக் கொண்டுவருவார் எனவும் எதிர்பார்த்தனர். ஆனால் இவை எதனையும் செய்யாத ரணில் விக்ரமசிங்க மக்களிடம் வரிச் சுமையை அதிகரித்துள்ளார். எரிபொருளின் விலை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றையும் அதிகரித்துள்ளார் . இதனால் மக்கள் மிகவும் கஷ்டத்துடனே வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.
மேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க உள்ளது. இவ்வாறான நிலையில் எல்லை நிர்ணயம், இளைஞர் பிரதிநிதித்துவம் என பல்வேறு நொண்டிச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கம் தேர்தலை காலந்தாழ்த்த சதி செய்துவருகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடந்தால் அதில் எமக்கே பாரிய வெற்றிக்கிடைக்கும். முடிந்தால் உரிய காலத்துக்குள் தேர்தலை நடத்துங்கள். ஐக்கிய மக்கள் பெரு வெற்றியீட்டிக்காட்டுவோம்.
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த 69 இலட்ச வாக்குகளில் 10 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு 55 இலட்ச வாக்குகள் கிடைத்தன. ஏனையக் கட்சிகளுக்கும் 2 – 3 இலட்ச வாக்குகள் கிடைத்தாலும் அக்கட்சிகளால் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளைப்போல பெற முடியாது.
எனவே அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துள்ளது என்பது பாராளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்துக்கு 157 வாக்குகளையும், இடைக்கால ஜனாதிபதி தெரிவின்போது 134 வாக்குகளும் அரசாங்கத்துக்குக் கிடைத்திருந்தன. ஆனால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்துக்கு வெறும் 123 வாக்குகளே கிடைத்துள்ளன. எனவே அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலத்தை இழப்பதற்கு இன்னும் 10 வாக்குகளே இல்லாது செய்யப்பட வேண்டும். எதிர்க்கட்சியில் உள்ள ஏனையக் கட்சிகளுடன் இணைந்து நாம் அரசாங்கத்தின் பெரும்பான்மையை மிக விரைவில் இல்லாமல் செய்வோம் என்றார்.

