அரச நிதியை மோசடி செய்து,பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நிலையில் நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானது. வரி அதிகரிப்பால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் மக்கள் உள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டினதும்,அரசாங்கத்தினதும் இருப்பிற்கும் வரி அறவிடல் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.வரி அறவிடல் ஊடாக நாட்டு மக்கள் பிரதிபலனை பெற்றுக்கொள்ள வேண்டும்.தற்போதை வரி திருத்தம் தமக்கு எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மக்கள் அவதானத்துடன் உள்ளார்கள்.
2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன்,ஆட்சிக்கு வர ஒத்துழைப்பு வழங்கியவர்களை திருப்திப்படுத்தவதற்காக அரசாங்கம் வரி விலக்கு செய்தது.
இதனால் பல பில்லியன் ரூபாவை அரசாங்கம் இழக்க நேரிட்;டது.பொருளாதாரத்தை சீரழித்;து முழு நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.
பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இவர் நாட்டின் நிதி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை என குறிப்பிட்டு முழு நாட்டையும் தவறாக வழிநடத்தினார்.
முழு நாட்டு மக்களையும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி விட்டு,நாட்டை பிற நாடுகளிடம் கையேந்த வைத்துவிட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தற்போத நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகபோகமாக வாழ்கிறார்.அது மாத்திரமல்ல பொருளாதார பாதிப்பு தொடர்பில் புத்தகம் எழுதுகிறார்.
பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வரி செலுத்த முடியாது என நாட்டு மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.இது உண்மை.நாட்டு மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
அரசாங்கத்தின் முறையற்ற வரி கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 400 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள் மறுபுறம் தகவல் தொழினுட்ப துறை நிபுணர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளார்கள். உயிரை பணயமாக வைத்து நாட்டை விட்டு சென்று விடலாம் என்ற நிலைப்பாட்டில் தான் பெரும்பாலான மக்கள் உள்ளார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்த வேண்டும் இந்த அரசாங்கத்திற்கு மக்களாதரவு கிடையாது,ஆகவே தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய நாட்டு மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.

