ஜமால் கஷோகி கொலை | சவுதி இளவரசர் மீதான வழக்கு தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம்

77 0

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி இளவரசர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலையின் பின்னணியில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது.‌அவரை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது. ஆனால் சவுதி அரேபிய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது. சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கூறி வந்தன.

இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக சவுதி இளவரசர் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டு நடந்து வந்தது. இவ்வழக்கை ஜமாலின் காதலி ஹதீஜா ஜென்கிஸ் தொடுத்திருந்தார்.

இந்த நிலையில் சவுதியின் பிரதமராக சல்மான், சவுதி மன்னரால் நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜமால் கொலை வழக்கில் இறையாண்மை அடிப்படையில் சல்மான் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு ஜமாலின் காஷோகியின் காதலி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.