தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் அவசர மருத்துவத்துக்கான முதுநிலை படிப்பு

146 0

இந்தியாவில் முதல்முறையாக, 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர மருத்துவத்துக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவம் தொடர்பான முதுநிலை மருத்துவ படிப்பை (எம்டி) சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், விஷ முறிவு மருத்துவ சிகிச்சை குறித்த கையேட்டை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறை ஆணையர் நாகராஜன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் தாரேஷ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ச.உமா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொ) இரா.சாந்திமலர், உலக சுகாதார நிறுவன அலுவலர்கள் டிரினா ஹாக்கே மற்றும் ஆருஷி, அரசு மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

இந்தியாவிலேயே முதல்முறையாக அவசர மருத்துவத்துக்கான பிரத்யேக துறை தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி அவசர மருத்துவத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப்படுகிறது. இதுவரை 85 இடங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதில் மத்திய, மாநில அரசுக்கு தலா 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 5 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக வங்கியின் உதவியுடன் ரூ.100 கோடி அளவுக்கு கட்டமைப்புகள் மேம்படுத்தும் பணி, தமிழகத்திலுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தொடங்கப்படவுள்ளது. இந்த பாடப்பிரிவு தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முதுகலை பட்டப்படிப்பு உருவாக்குவதற்கு பல்வேறு இணைத்துறைகளை மேம்படுத்துவது அவசியமாக இருந்தது, அதனால்தான் 21 தலைக்காய சிறப்பு மருத்துவ நிபுணர்கள், 5 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், 6 வாஸ்குலார் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், 10 இதய அறுவைசிகிச்சை மருத்துவர்கள், 49 மயக்கவியல் மருத்துவர்கள் பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இந்த முயற்சி மத்திய அரசால், குறிப்பாக நிதிஆயோக் நிர்வாகத்தால் பாராட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா முழுமைக்கும் இளங்கலை மருத்துவம் படிப்பவர்களுக்கு இந்த பட்டப் படிப்பு அவசியம் என்று உணர்த்தப்பட்டு, கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.