இஷாலினி விவகாரம் : மொழி பெயர்ப்பாளரின்றி மரண விசாரணை சாட்சிப் பதிவு ஒத்திவைப்பு

71 0

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் இஷாலினியின் மரணம் தொடர்பிலான மரண விசாரணை சாட்சிப் பதிவுகள்  அடுத்த வருடம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பீ/ 52944/02/21 எனும் குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 06) மரண விசாரணை சாட்சிப் பதிவுக்காக விசாரணைக்கு வந்தது.

கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இவ்வாறு அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதன்போது 4ஆம் இலக்க  சாட்சியாளரின்  சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின்  உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இவ்வாறு மொழி பெயர்ப்பாளரின் உதவியைப் பெற முடியாமல் போகும் 2 ஆவது சந்தர்ப்பம்  இதுவாகும்.

அதன்படி குறித்த வழக்கின் மரண விசாரணை சாட்சிப் பதிவுகள்  எதிர்வரும் 2023 ஜனவரி 10 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.