வித்தியா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!

235 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் பாலியல் வன்புனர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கு விசாரணையில் பன்னிரெண்டாவது சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

குறித்த மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையானது இன்றைய தினம்  ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ் அனுமதியை வழங்கியிருந்தார்.

இன்றைய வழக்கில் மன்றில் முன்னிலையாகிய குற்றப்புலனாய்வு அதிகாரி குறித்த வழக்கின் பன்னிரெண்டாவது சந்தேகநபரிடம் மேலதிக விசாரணை மேற்கொள்வதற்கான அனுமதியை மன்று வழங்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை செய்திருந்தனர்.

இதற்கு நீதிவான் அனுமதியளித்ததோடு இன்றில்  இருந்து எதிர்வரும் 28ஆம் திகதி வரை அதற்கான கால எல்லையையும் வழங்கியிருந்தார்.

அத்துடன் குறித்த வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை , யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவரது படுகொலை வழக்கில் சந்தேகநபர்கள் இருவரையும் சாட்சியாளரான சிறுவன் அடையாளம் காட்டியுள்ளார்.

கடந்த மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் எனும் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவர்களுக்கான அடையாள அணிவகுப்பானது நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது இச் சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியமான குறித்த சிறுவன் இவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியிருந்தார்.

இதனை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்களில் முதலாம் நபரது இரத்த மாதிரியை பெற்றுக்கொள்வதற்காக குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுமதிக்குமாறும் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் இவ் வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டிருந்தார்.