மட்டு வவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்

196 0

மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச்சாவடியில்  சுட்டுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு நேற்று புதன்கிழமை (30) இரவு  பொலிஸ் நிலையத்தில் அவர்களின் திருவுருவ படத்திற்கு பொலிஸார் சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அனுஷ்டித்தனர்.

கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் திகதி  வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ் மற்றும் நிரோசன் இந்திக பிரசன்ன ஆகிய இருவரையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் குழுவினர் கத்தியால் குத்தியும்  துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து அவர்களின் துப்பாக்கிகளை அபகரித்து சென்றனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தலைமையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்அஞ்சலி செலுத்தும் நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமியும் பொலிஸாரும் கொலை செய்யப்பட்ட பொலிஸாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக வீதியால் பிரயாணம் செய்தவர்களுக்கு தாகசாந்தியாக பிஸ்கட் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது.