வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் கோவில் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்றுவருவதாக ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது குறித்து யாழ். மாவட்ட செயலகத்தை விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பிள்ளையார் கோவிலின் குளத்தில் நபர் ஒருவர் தாமரை வளர்க்கப்போவதாக தெரிவித்து, குளத்தில் இருந்து சுமார் 200 லோட்டுக்கு அதிகமான மணலை எடுத்து, வெளியிடங்களில் விற்பனை செய்யப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த முறைப்பாட்டில்,
குறித்த குளத்தில் கால்நடைகள் நீர் அருந்தும் நிலையில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு, மண் அகழ்வு இடம்பெறுவதால் கால்நடைகள் குளத்துக்குள் மூழ்கும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஊர்மக்கள் சிலர் இதைப் பற்றி குளத்தில் மணல் அகழ்பவர்களை கேட்டதற்கு, பிரதேச சபை தவிசாளர் தமக்கு அனுமதி தந்ததாக தெரிவித்தே மணல் ஏற்றிச் செல்வதாய் பதிலளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னரே இவ்விடயம் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், மணல் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலமாக விளக்க, அதனையடுத்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் முறைப்பாட்டாளருக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் தெரியப்படுத்துமாறு ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்புச் செயலாளரினால் யாழ் மாவட்ட செயலகத்துக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

