ஜனநாயகத்துக்கான மக்கள் சக்தி விரைவில் உருவாகும்

89 0
தேர்தலை நடத்த மாட்டோம் என ஜனாதிபதி கூறியதில் தமக்கு ஆச்சரியமில்லை எனவும், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாமல் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு வந்து, முன்னாள் ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் பிரதமராகி, பின்னர் பாராளுமன்ற பெரும்பான்மையின் விருப்பத்தின் பேரில் ஜனாதிபதியானவர் என்பதனால் அவருக்கு தேர்தல் ஒன்றின் பெறுமதி புரியவில்லை எனவும், மக்களின் வாக்குரிமை தொடர்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவரது பேச்சுக்கள் குறித்து தான் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானவர், 68 இலட்சம் வாக்குகளைப் பெற்று பிரதமரானவர், நிதியமைச்சரானவர் உள்ளிட்டோர், திடீரென இருந்த இடத்தைக் கூட மறந்து வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது தேர்தலினால் அன்றி மக்கள் போராட்டாத்தினாலையே விரட்டப்பட்டதாகவும், எனவே தற்போதைய ஜனாதிபதியும் கூட இதனை மறந்துவிடக் கூடாது எனவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (24) 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

தேர்தலை நடத்த மாட்டோம் என ஜனாதிபதி கூறியதும் அதற்கு ஆதரவாக சபையில் இருந்த அடிமைகளின் ஒரு பகுதியினர் ஆரவாரம் செய்தனர் எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் சந்தர்ப்பத்தில் அவ்வாறு ஆரவாரம் செய்வதை அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றத்தில் சிலர் ஒரு அடிமைத்தனத்தில் இருந்து இன்னுமொரு அடிமைத்தனத்திற்கு மாறியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உரைக்கு ஒரு சில அடிமைகள் ஆரவாரம் காட்டினாலும் நாட்டின் 220 இலட்சம் மக்கள் மிகவும் வருத்தம் கொண்டதாகவும், ஜனநாயகத்துக்கான மக்கள் சக்தி விரைவில் உருவாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட நிலை முறையாக மறுநிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும், ஜனநாயகத்தைப் மதிப்பதாக கூறும் ஜனாதிபதி, நேற்றுக் கூறிய அந்த கருத்தை உடனடியாக நீக்கி தேர்தலை நடத்தி, நாடு மீண்டு வர சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி நன்றியுணர்வு அறிந்தவராக இருந்தால் போராட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும், போராட்டத்தினாலையே அவர் ஜனாதிபதியானார் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியது கடந்த மே 9 ஆம் திகதி நடந்த தாக்குதலாலையே எனவும் அவர் தெரிவித்தார்.

எந்தவிதமான வன்முறைகளையும் தாம் அனுமதிப்பதில்லை எனவும், அவ்வாறான வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வன்முறையும் மிலேச்சத்தனமுமின்றி இடம்பெற்ற போராட்டத்தை, அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களே வன்முறை ரீதியாக தாக்கினர் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் அமைதியான பொது மக்கள் போராட்டத்தை அவசர கால சட்டத்தைப் பயன்படுத்தி ஒடுக்க முயன்றால், எதிர்க்கட்சியாக அதற்கு எதிராக முன் நிற்பதாகவும், அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் பொருளாதாரத்தை அழித்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக மக்கள் எழுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அவ்வாறே தான் மஹிந்தவின் சீடராக இருந்திருந்தால் இந்நேரம் எதிர்க்கட்சித் தலைவராக அல்லாது ஜனாதிபதியாகவே நியமிக்கப்பட்டிருப்பேன் என தான் மஹிந்த ராஜபக்சவின் சீடர் என்று கூறியவருக்கு கூறவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறான பொய்ப் பிரசாரங்களால் தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சியை அழிக்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சவைப் பின்பற்றுபவராக மாறி தனது கொள்கைகளையும் சுய மரியாதையையும ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.