அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது சேவையாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்

224 0

15 இலட்சம் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை அரச நிர்வாகத்தில் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது சேவையாளர்களுக்கு நட்டஈடு வழங்கி பதவி நீக்கம் செய்ய நேரிடும்.

வெற்றிடமாகியுள்ள அத்தியாவசிய அரச சேவைகளுக்கான நியமனங்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான செயற்பாட்டை அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து முன்னெடுக்க முடியாது. எதிர்க்கட்சியும்,ஆளும் தரப்பினுரரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரம் நெருக்கடியான சூழலை வெற்றிக் கொண்டு நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.

 

நாடு எதிர்க்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து எவரும் விடுப்பட முடியாது. ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.

நடந்தவறை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. அரசியல் கட்சிகள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தேசிய பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் சபையில் உரையாற்றினார்.

தேசிய பிரச்சினை தொடர்பில் காலம் காலமாக பேசப்படுகிறது.தேசிய பிரச்சினைக்கு இந்த அரசாங்கத்தில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும்.

தற்போதைய பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன உள்ளார்கள், தேசிய பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார். கட்சியை பலப்படுத்துவதை விட தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கம் இவர்களுக்கு உண்டு.

தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் தரப்பினரும் ஒருசில விடயங்களில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்.புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும்.

சிறைச்சாலையில் பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே கூட்டமைப்பினர் நம்பிக்கையுடன் இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

இவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். வடக்கு மாகாணத்தில் உழுந்து பயிர்ச் செய்கை அதிகளவில் உற்பத்தி செய்யடுகிறது. சகோதரத்துவத்துவடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியும்.

அரச வருமானத்தை தடுக்கும் வகையில் போராட்டங்கள் இடம்பெற்றால் நாட்டில் மீண்டும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.

போராட்டங்கள் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைய கூடாது.சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்படுத்தப்பட்டால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டாம்,அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அரசியல்வாதிகள் குறிப்பிடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் குறிப்பிப்படும் கருத்துக்கள் நாட்டுக்கு செய்யும் துரோகமாக கருதப்படும்.

அரச சேவையின் ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய 15 இலட்சம் அரச சேவையாளர்கள் அரச கட்டமைப்பில் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.

ஒரு சில அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது நட்டஈடு வழங்கி அரச சேவையாளர்களை குறைக்க நேரிடும். மறுபுறம் அத்தியாவசிய அரச பதவிகளில் வெற்றிடம் காணப்படுகிறது.

வெற்றிடமாக உள்ள அரச பதவிகளுக்கான நியமனங்களை கூட வழங்க முடியாத நிதி நெருக்கடி காணப்படுகிறது.அரச சேவை தொடர்பில் பேச்சுவார்த்தை ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.