யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை இராணுவத்தினர் சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைக்கப்படுகின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது.
வடமாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் போதைப்பொருள் விற்பனை செய்வோர் மற்றும் போதைப்பொருள்
பாவிப்போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள இராணுவமுகாமில் தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய உதவியாக இருக்கும்.
எனினும் இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த விடயத்தில்
எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். எனவே நமது எதிர்கால சந்ததியினரை போதைக்கு அடிமையாக்குவதற்கு நாங்கள் இடமளிக்காது போதைப் பாவனைக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவே சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன. எனவே பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனையினை குறைப்பதற்கு எமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் என்றார்.

