பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிகிச்சைக்குப் பின் நலமுடன் உள்ளார்

182 0

 துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு(70), காலில் இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கிநேற்று முன்தினம் நீண்ட பேரணிநடத்த முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி திட்டமிட்டிருந்துது. இதில் பங்கேற்க குஜ்ரன்வாலா பகுதிக்கு சென்ற இம்ரான்கான், தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற லாரி மீது ஏறினார்.

அப்போது கூட்டத்தில் மறைந்திருந்த ஒருவர் இம்ரான் கான் மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில், தொண்டர் ஒருவர் உயிரிழந்தார், 13 பேர் காயம் அடைந்தனர்.

இம்ரான் கானுக்கு காலில் குண்டு பாய்ந்த இடத்தில் உடனடியாக கட்டு போடப்பட்டு அவர் லாகூரில் உள்ள சவுகத் கானும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இம்ரான் கான்விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவின் தலைவர் டாக்டர் பைசல் சுல்தான் கூறினார்.

 

பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் ஃபாவத் சவுத்திரி கூறுகையில், ‘‘அறுவை சிகிச்சைக்குப் பின் இம்ரான் கான் நலமுடன் இருக்கிறார். இச்சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சி. பாகிஸ்தான் அரசுக்குஎதிரான பேரணியை வசீராபாத்திலிருந்து மீண்டும் தொடர்வது குறித்து நாங்கள் அறிவிப்பு வெளியிடுவோம்’’ எனறார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் தொண்டர்கள் பேரணிகள் நடத்த வேண்டும் என பிடிஐ கட்சி கூறியுள்ளது.

உயர்நிலைக் குழு விசாரணை: இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர், ராணுவ தளபதி ஆகியோர்தான் காரணம் என பிடிஐ கட்சி மூத்ததலைவர் ஆசாத் உமர் கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் உயர்நிலைக் குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரிடம் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.