வவுனியா பொருளாதார வர்த்தக மையத்தை வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்வு

82 0

வவுனியாவில் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் நேற்று (03.11.2022) பார்வையிட்டுள்ளனர்.

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையமானது 50 கடைகளை கொண்டு பல மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட நிலையில் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் காணப்படுகின்றது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தினை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாக விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மத்திய நிலையத்தை இன்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“அரசாங்கத்தால் பல மில்லியன் ருபாய்கள் செலவு செய்து பொருளாதார மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை அந்த மாவட்ட மக்களோ அல்லது ஏனைய மக்களோ பயன்படுத்தாது சேதமடைந்து வருகிறது. எமது அமைச்சுக்குட்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.

மக்கள் பாவனைக்கு விடுவதற்காக நேரடியாக சென்று அப் பொருளாதார மத்திய நிலையங்களில் என்ன பிரச்சினை என ஆய்வு செய்து வருகின்றேன்.

இதன்பின் அரச அதிபர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள், வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருடன் கதைத்து விரைவாக திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

ஏனைய மாவட்ட பிரச்சினை வேறு. இங்கு வேறு பிரச்சினை. பொருளாதார மத்திய நிலையத்திற்குரிய கடைகளை இன்னும் வழங்கவில்லை. விவசாயிகள், மரக்கறி வியாபாரிகள் ஆகியோருக்கு இதனை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும்.”என தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சருடன், அமைச்சின் மேலதிக செயலாளர் உட்பட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒருங்கிணைப்பாளர் கி.டினேஸ் மற்றும் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.