இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் நேற்றைய தினம் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களையும் தங்களையும் விமானப்படையினர் புகைப்படம் எடுத்து ஒளிப்பதிவு செய்து அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் நேற்றைய தினம் கருத்து தெரிவித்த நிலையில் இன்றையதினம் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு கோரி பதினெட்டாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு விமான படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபடும் சிலரை மது பாவனைக்கு அடிமையாக்கி அவர்களூடாக போராட்டத்தை குழப்ப சதித்திட்டம் தீட்டிவருவதாகவும் அவ்வாறான சம்பவங்கள் சில இடம்பெற்றதாகவும் எத்தடை வந்தாலும் தாம் கணிக்குள் செல்லும்வரை போராட்டம் நிறுத்தப்படாது எனவும் தமக்கு மக்கள் அச்சமின்றி பூரண ஆதரவு வழங்குமாறும் கோரிய நிலையில் விமானப்படையினரின் இந்த அறிவித்தல் தம்மை அச்சுறுத்தவே எனவும் தெரிவிக்கின்றனர்.
விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் அந்த பகுதியில் இந்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
அந்தவகையில் நேற்றும் பலர் தமது ஆதரவுகளை வழங்கினர் .