யால சரணாலய விவகாரம் : அரசியல் தலையீடுகளின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

195 0

யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் செயற்பட்டவர்கள் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து , அரசியல் தலையீடுகள் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் புதன்கிழமை (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த சம்பவம் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதனுடன் தொடர்புபட்டவர்களில் தண்டனை வழங்கப்பட வேண்டியவர்களுக்கு தண்டனை வழங்கி , அரசியல் அழுத்தங்கள் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனத்தை செலுத்தியதாகக் கூறப்படும் நபர்களையும் அவர்கள் பயணித்த வாகனங்களையும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் எந்தவொரு சரணாலயத்திற்குள்ளும் பிரவேசிக்க முடியாதவாறு தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயம், வனஜீவராசிகள், வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் யால சரணாலயத்தில் 40 ஜீப்களில் பிரவேசித்த குழுவினர் சரணாலயத்திலுள்ள விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதுடன், சரணாலயத்தின் விதிகளை மீறி செயற்பட்ட காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடையவர்களையும் வாகனங்களையும் விரைவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.