ஆறுமுகசாமி அறிக்கையால் விஐபிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் அஞ்சுவர்: டிடிவி தினகரன்

117 0

விஐபி அந்தஸ்தில் உள்ளவர்கள் இனிவரும் காலங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அஞ்சுவார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மருதுபாண்டியரின் 221-வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்களின் உருவச் சிலைகளுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் யாரெல்லாம் காரணம், யாரெல்லாம் அதற்கு அனுமதி கொடுத்தனர் என்பதை பார்த்து, அது யாராக இருந்தாலும், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கோரிக்கை. அரசு இதனை நிறைவேற்ற வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை என்பது, ஒரு அரசியல்வாதியின் அறிக்கையைப்போல் உள்ளது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் சொல்கின்றனர். எங்கள் சித்தியை(வி.கே. சசிகலா) பாதுகாப்பதற்காக நான் இதை கூறவில்லை. மூத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள், பொதுவானவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், ஏன் எங்களுக்கு எதிரானவர்கள்கூட அந்த அறிக்கை உண்மை இல்லை என்று கூறுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை மிகவும் தவறானது. மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரின் மரியாதையை குலைக்கும் வகையில் உள்ளது.

தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள், முதல்வராக இருப்பவர், ஏற்கெனவே பொறுப்புகளில் இருந்தவர்கள், வருங்காலத்தில் முக்கிய பதவிகளுக்கு வருபவர்கள் என விஐபி அந்தஸ்தில் உள்ளவர்கள் இனிமேல் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைப் பெற சென்றால், மருத்துவர்கள் சிகிச்சையளிக்க பயப்படுவார்கள். காரணம் அவர்கள்மீது வீண்பழிதான் ஏற்படும். அதற்கான சூழல்தான் தற்போது வந்துள்ளது.

என்று அவர் கூறினார்.