கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு- பலியான முபினுடன் சேர்ந்து மர்ம பொருளை கடத்திய 5 பேர் கைது

118 0

கோவையின் முக்கிய பகுதியான டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேட்டில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு நேற்றுமுன்தினம் அதிகாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 2 துண்டாக வெடித்து சிதறியதுடன் கார் தீப்பற்றி எரிந்தது. தீயில் கருகி ஒரு நபர் பிணமாக கிடந்தார். சம்பவம் நடந்த இடத்தில் 2 கியாஸ் சிலிண்டர்கள் கிடந்ததால் இது விபத்தாக இருக்கும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த இடம் கோவில் முன்பு என்பதாலும், கார் தீப்பிடித்ததில் கோவிலின் முன்பகுதி சேதம் அடைந்திருந்ததாலும் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டது.

தீபாவளிக்கு முந்தைய நாள் நடந்த சம்பவம் என்பதால் பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் யாராவது சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக கோவை விரைந்து வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். கடந்த 2 நாட்களாகவே அவர் கோவையிலேயே முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார். கார் வெடித்து சிதறிய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டபோது அந்த இடத்தில் ஆணிகள், கோலி குண்டுகள், பால்ரஸ் இரும்பு குண்டுகள் கிடந்தன. இதனால் சந்தேகம் மேலும் வலுத்தது.

இதற்கிடையே காரில் இறந்து கிடந்தவர் யார் என்பதை போலீசார் அடையாளம் கண்டனர். அவரது பெயர் ஜமேஷா முபின் (வயது 25). கோட்டைமேடு எச்.எம்.பி.ஆர். தெருவைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் ஜமேஷா முபினின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பலியானவர் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கியது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக ஜமேஷா முபின் வீட்டு அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் திடுக்கிடும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உள்பட 5 பேர் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே வருகிறார்கள். அந்த மூட்டை மிகவும் கனமாக இருக்கும் என தெரிகிறது. இதனால் தூக்க முடியாமல் 5 பேரும் சேர்ந்து தூக்கி காரில் ஏற்றுகிறார்கள். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது. அந்த மூட்டையில் அவர்கள் என்ன எடுத்துச் சென்றார்கள்? ஜமேஷா முபின் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கியதால் மூட்டையில் இருந்தது அனைத்தும் வெடிபொருளாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதனால் ஜமேஷா முபின் உடன் மர்ம பொருளை ஏற்றிச் சென்றவர்களை பிடித்தால் அடுத்தக்கட்ட விபரீதத்தை தடுக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 5 பேரை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரிக்கிறார்கள். ஜமேஷா முபின் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற மர்ம பொருட்கள் என்ன? சதிச்செயலுக்கு பயன்படுத்த அந்த பொருளை எடுத்துச் சென்றார்களா? தாக்குதல் என்றால் எந்தவிதமான தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்? என பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் வீட்டில் இருந்து காரில் கொண்டு சென்ற பொருட்களை எங்கு வைத்துள்ளனர்? என்பது பற்றியும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. கைதானவர்கள் ஜமேஷா முபின் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று தங்களை அழைத்ததாகவும், அவருக்கு உதவி செய்ய சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் அதனை ஏற்காமல் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.

கைதான 5 பேர் அளிக்கும் தகவலை கொண்டே ஜமேஷா முபின் இறந்தது எப்படி, என்ன சதி திட்டம் தீட்டப்பட்டது? என்ற விவரங்கள் தெரியவரும். மேலும் இந்த வழக்கை தமிழக போலீசார் தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கவும் வாய்ப்பு உள்ளது.