சாரா ஜஸ்மின் இறந்தாரா இல்லையா?

308 0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் குண்டுதாரியின் மனைவியான சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தாரா இல்லையா என்ற சந்தேகத்தை போக்கும் மூன்றாவது மரபணு பரிசோதனை அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட விசாரணைகளுக்காக அந்த மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்திற்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட நபர்களின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் இந்த மூன்றாவது மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதியுடன் அம்பாறை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்டன.

சாரா ஜஸ்மின் உயிரிழந்தார என்பதை உறுதிப்படுத்த இதற்கு முன்னர் இரண்டு மரபணு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த விஜேசேகர, சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் சாரா ஜஸ்மின் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார்.