மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் பெற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராடி வருகிறது : கமலிடம் சிறீதரன் தெரிவிப்பு

207 0

மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராடி வருகின்றது என கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் அவர்கள் மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் அவர்களை தமிழ் நாட்டின், ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் 17 ஆம் திகதி திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர், பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கை வாழ் தமிழர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி நிற்கின்றனர். மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகின்றது. தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது. இதற்கு எதிரான இந்தியா அரசாங்கத்துடன் இணைந்து நீங்களும் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் இலங்கைக்கு வருகை தரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மையம் தொடர்ந்து குரல்கொடுக்கும் என தலைவர் கமல் ஹாசன் அவர்கள் இதன்போது உறுதியளித்தார்.

இதேவேளை, இலங்கையின் சமகால அரசியல் வரலாறு, பிரச்னைகள் குறித்தான ஆவணங்கள், புத்தகங்கள் என்பனவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரால் கமல்ஹாசன் அவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.