வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே இன்று காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்தெறிந்து கொண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்கள். இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் மூன்று பேரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்தது.
அதிமுகவை சேர்ந்த இவர்கள் தொழிலதிபர்களாக இருந்து வரும் நிலையில் வேடந்தாங்கலில் இவர்களுக்கு சொந்தமான பொக்லைன், ஜேசிபி எந்திரங்கள் இயங்கி வருவதாகவும் அந்த வாகனம் பழுதடைந்ததால் இங்கிருந்து மெக்கானிக்கை அழைத்து சென்று வாகனத்தை சரி செய்துவிட்டு காரில் ஐந்து பேரும் வந்துள்ளனர். சம்பவ இடத்தில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் இறந்து போனதும் உடன் வந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகிய இருவரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

