விண்ணப்பம் கோரல் ஒப்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிப்பு

102 0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் “எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் கோரல் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனினும் இதற்கான முடிவுத் திகதி தற்போது நீடிக்கப்பட்டிருப்பதனால் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

இதன்படி தற்போது உதவித்தொகையைப் பெற்று வரும் சமுர்த்தி, வயோதிபர்கள், அங்கவீனமானோர், சிறுநீரக நோயாளர்கள், பொதுமக்கள் உதவித் தொகை பெறுவோர் உள்ளிட்ட அனைத்துப் பயனாளிகளும் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயனாளிகளும் நலன்புரி நன்மைகளைப் பெற எதிர்பார்த்திருப்பவர்களும் இப்புதிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபையின் இணைய தளத்தில் (www.wbb.gov.lk) இதற்கான விண்ணப்ப ப்படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அப்பிதேசத்துக்குச் சொந்தமான பிரதேச செயலாளர் அலுலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பான மேலதிக விவரங்களை 0112151481 அல்லது 1919 என்ற அரச தகவல் மத்திய நிலையத்தின் தொலைபேசி இலக்கத்திற்கூடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

இன்று (14) வரை நாடு முழுவதுமுள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்களிலுள்ள சமூக சேவைகள் பிரிவில் 2.4 மில்லியன் விண்ணப்பங்கள் கோப்பில் இடப்பட்டிருப்பதுடன் 1,083,724 விண்ணப்பங்களின் தரவுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த சமூக நலன்புரி வேலைதிட்டத்திற்காக இதுவரை சுமார் 3.9 மில்லியன் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.