இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும். ஆனால் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு பின்னோக்கிய படியிறக்கல் கொள்கையை கடைப்பிடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு குறைந்த வருமானமுடைய நாடு என்ற அந்தஸ்தை அரசாங்கம் பேணவிரும்புகிறது என்பது இதன் அர்த்தமாகும்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் கிடையாது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சர்வதேச அபிவிருத்திச் சங்கம் வழங்கும் சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக, நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையை தற்காலிகமாக பொருட்படுத்தாது செயற்பட உலக வங்கிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அமை;சசரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இக்கட்டான நிலையிலுள்ள நாடுகளுக்கு சலுகை அடிப்படையிலான உதவி வழங்கும் உலக வங்கியின் கீழ் இயங்கும் அமைப்பாக சர்வதேச அபிவிருத்திச் சங்கம் செயல்படுகிறது. இதன்படி, இடைநிலை சலுகைக் கடன் திட்டத்தை மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பின்பற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த முறை ‘பயி’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்தோனேசியா உட்பட 12 நாடுகள் ஏற்கனவே இந்த முறையைப் பயன்படுத்தி கடன் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நிதியுதவிகள் , கடன் மற்றும் சலுகைகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதற்காக இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக படியிறக்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார். அதனையடுத்தே ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் மேற்குறிப்பிட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

