எங்கள் நிலத்தில் இராணுவத்தினர் தேவையில்லை!

105 0

வடக்கு,கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்திய கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று இன்று புதுக்குடியிருப்பு தேவிபுரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டிற்குள் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தியும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் என்பது ஜனநாயக உரிமையாகும்,13 ஆவது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பரவலாக்கத்துக்கான உரிமையினை உறுதிப்படுத்துகின்றது என்பதை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவு திட்டத்தின் இன்று 68 ஆவது நாள் கவனயீர்ப்பு நடவடிக்கை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் எங்கள் நிலப்பரப்பினை ஆக்கிரமித்துள்ளார்கள்,எனது நிலம் கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எங்கள் உரிமையினை எடுத்துக்கூற முடியாத மக்கள் இருக்கின்றார்கள். எங்கள் நிலப்பரப்பில் இராணுவத்தினர் தேவையில்லை. மொழி உரிமை எங்களுக்கு உள்ளது. தமிழில் உரிமை வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கவேண்டும். இனி இங்கு சண்டை போடுவதற்கும் ஆட்கள் இல்லை. சமாதானம் கேட்பதற்கும் ஆட்கள் இல்லை.சும்மா இருக்கும் மக்களை வதைக்க வேண்டாம். இதனால் எங்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவை இல்லை.இங்குள்ள இராணுவமாக இருந்தாலும் புலனாய்வு துறையாக இருந்தாலும் எங்களுடன் அன்பாக நடந்து கொள்கின்றார்கள். கன்னக்கோல் வைப்பதற்கு இங்கு ஆட்கள் இல்லை.நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கும் போது இது தேவை இல்லை என கவனயீர்ப்பில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.