தியாகி திலீபனை நினைவுக்கூர்ந்ததற்காக எனது தனிப்பட்ட முகநூல் முடக்கம்

295 0

தியாகி திலீபனின்  நினைவேந்தல் குறித்த புகைப்படங்களையும் செய்திகளையும் பதிவேற்றம் செய்மைக்காக (2022-09-20) ஆம் திகதியிலிருந்து 90 நாட்களுக்கு இயங்க முடியாதவாறு எனது தனிப்பட்ட முக நூல் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இரண்டாவது நாளாக இடம்பெற்ற  ஜனாதிபதியின் விஷேட உரை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சபையின் கவனத்துக்கு கொண்டு வந்த அவர்  மேலும்  குறிப்பிட்டதாவது,

எனது சொந்தப்பெயரில் இயங்கிவரும் எனது தனிப்பட்ட முக நூல் கணக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் குறித்த புகைப்படங்களையும் செய்திகளையும் பதிவேற்றம் செய்மைக்காக (2022-09-20) ஆம் திகதியிலிருந்து 90 நாட்களுக்கு இயங்க முடியாதவாறு எனது முக நூல் முடக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் நிலைமாறு கால நீதி பொறிமுறையின் அடிப்படையில் வணக்க முறைகளுக்கு அனுமதி உண்டு.

எனவே அதனை வழங்க வேண்டுமென சர்வதேச சமூகம் கேட்டதற்கு  இணங்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் ஜனதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையில் (2015-11-07) ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போதும் இந்த விடயம்  ஆராயப்பட்டு வணக்கத்திற்கு தடையில்லா என்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும் (2022-08-03) ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டு அதன்போதும் வணக்க நிகழ்வுகளுக்கு இந்த நாட்டில் தடையில்லை என்று அவரால் தெரிவிக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் அனுமதியோடு இந்த நாட்டில் நடக்கும் நிலையில் அத்தகைய செய்திகள், படங்களை பகிர்ந்தமைக்காக எனதும் என் போன்ற பலரினதும் முக நூல் கணக்குகள் முழுமையை முடக்கப்பட்டுள்ளமை எமது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தியள்ளது.

முகநூலை எமது மன உணர்வுகளை வெளிப்படுத்தும் பொது வெளி  ஊடகமாக பார்க்கப்பட்ட நிலையில் இன்று அரச சார்பான  ஊடகமொன்றாகவே பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே எனது முக நூலை முடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி முக நூல் நிறுவனத்தின் இலங்கை க்கான வதிவிடத்தலைவர் அபயரத்னவுக்கு என்னால் மின்னஞ்சல் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டும் இன்று வரையில் அது தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை என்றார்.

இதற்கு இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் பதிலளிக்கையில் முகநூலுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பில்லை. அது வெளிநாட்டு நிறுவனம் .எனவே இது சர்வதேசத்தின் தடையே தவிர எமது தடை அல்ல என்றார்.