எரிபொருள் இறக்குமதி செய்வதால் நாளொன்றுக்கு 37 கோடி நட்டம்

190 0

முறையான விலைமனுகோரல் இல்லாமல் எரிபொருள் இறக்குமதி செய்வதால் நாளொன்றுக்கு 37 கோடி ரூபா நட்டத்தை அரசாங்கம் எதிர்கொள்கிறது.

எரிபொருள் வரிசையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு உண்மையை மூடி மறைக்க வேண்டாம்.எரிபொருள் இறக்குமதியில் இடம்பெறும் மோசடிக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசையை உருவாக்கவே பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.கடந்த ஆறு மாதகாலமாக எரிபொருள் இறக்குமதி முறையாகவே இடம்பெறுகிறது.

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களை இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டம் என வலுசக்தி மற்றும்  மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர ,பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறியின் குற்றச்சாட்டை மறுத்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டதாவது,

முறையற்ற வகையில் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானித்துள்ளது.  கடந்த 6 மாதகாலமாக முறையான மனுகோரலுக்கு அமையவே எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது.

அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் போது எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாரிய சவால்களை எதிர்க்கொண்டிருந்தது.எரிபொருள் வரிசையில் இருந்து பலர் மரணமடைந்தார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு எரிபொருள் வரிசைக்கு தீர்வு வழங்கப்பட்டது, வரிசையில் இருந்து எவரும் மரணிக்கவில்லை என்பது மகிழ்வுடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் இறக்குமதி சவால்மிக்கதாக அமைந்தது.கடந்த ஜனவரி மாதம் முதல் எரிபொருள் இறக்குமதிக்காக வெளியிடப்பட்ட விலைமனுகோரலை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளேன்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது என அறிவித்ததை தொடர்ந்து பெரும்பாலான நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதிக்காக முன்வரவில்லை.

ஒருசிலருக்கு தற்போது எரிபொருளை விநியோகிக்கும் நிறுவனம் தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது. நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னரே இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டு முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கையை முன்னெடுக்கிறது. ஆகவே போலியான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு இருக்கும் எரிபொருள் விநியோகஷ்தர்களை இல்லாமலாக்கி கொள்ள வேண்டாம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய தயாசிறி ஜயசேகர,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முறையான விலைமனுகோரல் இல்லாமல் எரிபொருள் இறக்குமதி செய்வதால் அரசாங்கத்துக்கு நாளொன்றுக்கு 37 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

ஒரு நிறுவனம் 21 டொலருக்கும்,பிறிதொரு நிறுவனம் 18.3 டொலருக்கும் எரிபொருள் இறக்குமதிக்கு முன்னிலையாகியுள்ள போதும் குறித்த நிறுவனத்திடமிருந்து 24 டொலர் அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.இந்த முறைக்கேடு தொடர்பில் நானும் சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பேன்.

எரிபொருள் வரிசையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என குறிப்பிட்டுக்கொண்டு முறையற்ற வகையில் செயற்பட இடமளிக்க முடியாது. எரிபொருள் வரிசையை அரசாங்கமே உருவாக்கியது.

எமது கருத்துக்கு எதிராக கூச்சலிடும் தரப்பினர் எந்த குடும்பத்துக்காக பாராளுமன்றத்துக்குள் சேவையாற்றுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்றார்.