போலி வழக்கு பதிவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் மூவருக்கு அபராதம்

78 0

58 வயதுடைய பெண் ஒருவரை போலியான குற்றச்சாட்டு வழக்கு ஒன்றின் அடிப்படையில் கைது செய்தமைக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து மொத்தமாக 5 இலட்சம் ரூபாவை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இத் தீர்ப்பினை நீதியரசர் விஜித் மலல்கொடவுடன் இணைந்து நீதியரசர் எஸ்.துரைராஜா மற்றும் நீதியரசர் மஹிந்த சமயவர்தன வழங்கி உள்ளனர்.

குறித்த மனுதாரர் கைது செய்யப்படும் போது ‘தேடப்படும் சந்தேகநபராக’ இருந்த போதிலும், கைது செய்யப்பட்ட நபர் குறித்த அதிகாரியிடம் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை சட்டத்தின்படி விளக்குமாறு கோரியுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டதன் காரணத்தை கூறவில்லை என விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது, அதனால் வழக்கின் செலவுத்தொகையாக 50 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.மஹிந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் சண்டருவன் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் பண்டார கருணாதிலக்க ஆகியோர் அரசியலமைப்பின் 12 (1) சரத்தின் கீழ் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதிவாதிகள் அரசியலமைப்பின் பிரிவு 13 (1) அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர்.