நாட்டில் எந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அங்கு தமிழ் சமூகம் புறக்கணிக்கப்படுகிறார்கள்.ஆகவே அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (04) வாய்மொழி மூலவிடைக்கான வினாக்கள் நேரத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அம்பாறை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாத நீண்டகால பிரச்சினையாகவே காணப்படுகிறது. அலிகம்பை , கண்ணகி கிராமம் ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்பகுதியில் வாழும் மக்களுக்கு தூய்மையான குடிநீரை விநியோகிப்பதற்கான திட்டம் 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது , இருப்பினும் இதுவரை அந்த அபிவிருத்தி திட்டங்கள் முழுமை பெறவுமில்லை,மக்கள் பயன்பெறவுமில்லை.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் அபிவிருத்தி ரீதியிலான திட்டங்களின் போது திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
அபிவிருத்தி பணிகள் மற்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள நீர்தாங்கி புனரமைப்பு தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பும் போது நிதியில்லை,என்ற பதில் மாத்திரமே கிடைக்கப்பெறுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச பிரிவில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது.குடிநீர் தொடர்பான பிரச்சினையை முன்வைக்கையில் இன ரீதியிலான கருத்துக்களை நான் முன்வைக்கவில்லை.முன்னாள் நீர்வழங்கள் அமைச்சரின் நிர்வாக கட்டமைப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே சுட்டிக்காட்டினேன்.
அலிகம்பை மற்றும் கண்ணகி கிராமத்தில் 70 சதவீதம் தமிழர்களும்,30 சதவீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றார்கள்.இருப்பினும் இவ்விரு பகுதியிலும் குடிநீர் திட்டம் முழுமைப்படுத்தப்படவில்லை.ஆனால் தமிழர் குறைவாக வாழும் பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் நூறு சதவீதமளவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் எந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அங்கு தமிழ் சமூகம் புறக்கணிக்கப்படுகிறார்கள்.ஆகவே அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும் என்றார்.

