அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு 27 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை அக்குழுவுக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.
தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ள நிலையில், தலைமைத்துவ பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க முடியாது என ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.
பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு தெரிவு குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு திங்கட்கிழமை (03) கூடிய போது கோபா குழுவின் உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் வருமாறு அறிவித்தார்.
மொஹான் பிரியதர்ஷன த சில்வா, லசந்த அழகியவன்ன, கே. காதர் மஸ்தான், சுரேன் ராகவன், டயனா கமகே, எஸ்.பி.திஸாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹசீம், சரத் வீரசேகர, விமலவீர திஸாநாயக்க, நிரோஷன் பெரேரா, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,ஜே.சி.அலவத்துவல, அசோக அபேசிங்க மற்றும், புத்திக பத்திரன, ஜயந்த சமரவீர,ஹெக்டர் அப்புஹாமி, ஹெஷா விதானகே, மேஜர் பிரதீப் உந்துகொட, இசுறு தொடங்கொட, வசந்த யாப்பா பண்டார, சாணக்கியன் இராசமாணிக்கம், டீ.சஹன் பிரதீப் விதான, டீ.வீரசிங்க, வீரசுமன வீரசிங்க, சரித ஹேரத் ஹரினி அமரசேகர ஆகியோர் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022ஆகஸ்ட் 10ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

