குருநாகல் வர்த்தகரின் மர்மக் கொலை – சந்தேநபர் சிக்கினார்!

64 0

குருநாகல் நகரில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரை இரும்பு ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குற்றச் செயல் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (01) குருநாகல் புத்தளம் வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தும் இடம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் சந்தேகநபரின் பணியிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட தங்க நகையும் சந்தேகநபர் பணிபுரியும் பணியிடத்தில் உள்ள குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் இன்று (02) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.